அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் அமமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. எம். ரெங்கசாமி அக்கட்சியில் இருந்து விலகி நாளை மார்ச் 26-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிமுக முகங்களில் ஒருவராக இருந்த மூத்த தலைவர் ரெங்கசாமி. அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அக்கட்சியில் இருந்து வருகிறார்.
2006-ம் ஆண்டு தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட ரெங்கசாமி திமுகவின் உபயதுல்லாவிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன் பின்னர் 2011 தேர்தலில் திமுகவின் உபயதுல்லாவை 7,329 வாக்குகளில் தோற்கடித்தார் ரெங்கசாமி.
2016-ம் ஆண்டு தேர்தலில் 3-வது முறையாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை 26,874 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது டிடிவி தினகரனை ஆதரித்தார் ரெங்கசாமி. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் ரெங்கசாமி. 2019-ல் தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில் ரெங்கசாமி அமமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை அமமுக, தேமுதிகவுக்கு கொடுத்தது.
தற்போதைய தேர்தலில் அமமுகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இத்தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ரெங்கராஜ், அமமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை மார்ச் 26-ந் தேதி திமுகவில் இணைய உள்ளார்.
