கால்பந்து உலகில் இன்றும் அசைக்கமுடியாத ஜாம்பவான்களாக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி திகழ்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், மெஸ்ஸி அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கரிலும், ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் தொடரிலும் பலகோடி சம்பவத்திற்கு விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு முதல் ரொனால்டோ அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இதன் மூலம் ஒரு அணிக்காக அதிக சம்பளம் பெறும் வீரர்கள் பட்டியலில் உலகளவில் முதலிடத்தில் உள்ளார்.
அவரது ஒப்பந்தம் முடிந்த நிலையில், 40 வயதான அவர் அணியில் இருந்து வெளியேறுகிறார் என்றும், மீண்டும் யூரோப்பியன் லீக்கில் விளையாட உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விதமாக, அல் நாசருடன் மேலும் இரண்டு ஆண்டு (2027 வரை) ஒப்பந்த நீட்டிப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திட்டார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக “அல் நாசர் என்றென்றும்” என ரொனால்டோ கூறும் வீடியோவை அந்த அணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது.
மேலும் இந்த இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக அவர் பெறும் சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்து தி சன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ரொனோல்டோ ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம், அணி உரிமையில் 15 சதவீத பங்கு (33 மில்லியன் பவுண்டுகள்), அல் நாசர் பட்டத்தை வென்றால் 446 கோடி ரூபாய் போனஸ் உள்ளிட்டவற்றை பெற உள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொனால்டோ கேப்டனாக இருந்த பதவிக்காலத்தில் அல் நாசர் அணி 2023 இல் அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பையை தவிர முக்கிய கோப்பைகளை கோட்டைவிட்டது.
அல் நாசர் அணி 2022-23 மற்றும் 2023-24 சீசன்களில் லீக்கில் இரண்டாவது இடம் பிடித்தது. 2024-25 சீசனில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.