இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை மார்ச் 25-ம் தேதி அறிவித்தார். அப்போது இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதால், இந்தத் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதால் வெற்றி வாய்ப்பு பறிபோகக் கூடும் என்று அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவினர் தங்கச்சி மடம் பகுதியில் போஸ்டர்களை ஒட்டி கட்சியின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். தங்கச்சிமடம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், ‘NDA கூட்டணி தலைமையின் கவனத்திற்கு’ என்ற தலைப்பில், அண்ணா திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ராமநாதபுரம் தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கியதை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வரிகள் காணப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது
