8வது சம்பள கமிஷன் எப்போது வரும்? மத்திய அரசு கொடுத்த பதில் என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

8th pay commission implementation update by central govt

8வது சம்பள கமிஷன் அமலாக்கம் குறித்த முக்கியமான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8வது சம்பளக் கமிஷன் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், அமலாக்கத் தேதி மற்றும் ஓய்வூதிய புனரமைப்பு போன்ற முக்கிய விஷயங்களில் தெளிவின்மை இருப்பதால் ஊழியர்களிடையே கவலை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், குறிப்பாக தேசிய கூட்டு ஆலோசனை இயக்கத்தின் (NC JCM) ஊழியர் தரப்பு, 8வது சம்பளக் கமிஷனின் விதிமுறைகளில் சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்த சம்பள கமிஷனின் அமலாக்கத் தேதியை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்றும், ஓய்வூதியப் புனரமைப்பு பற்றியும் குறிப்பிடப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மறுஆய்வு செய்வதற்காக 8வது மத்திய சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனுக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.

ஆனால், இந்த விதிமுறைகளில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற தேதி குறிப்பிடப்படவில்லை. இது ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 7வது சம்பளக் கமிஷன் 2025 டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது.

ADVERTISEMENT

எனவே, 2026 ஜனவரி 1 முதல் புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் அமலுக்கு வரும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விதிமுறைகளில் இந்தத் தேதி குறிப்பிடப்படாததால் அமலாக்கம் தாமதமாகுமா என்ற அச்சம் நிலவுகிறது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “8வது மத்திய சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விதிமுறைகள் நவம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன” என்று உறுதிப்படுத்தினார். ஆனால், அமலாக்கத் தேதி குறித்து கேட்டபோது, “அந்தத் தேதி அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும்” என்று மட்டும் பதிலளித்தார்.

இந்த பதில் தான் ஊழியர்களின் கவலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போது, அவை முன்தேதியிட்டு வழங்கப்படும். அதாவது, பரிந்துரைகள் அமலுக்கு வரும் தேதிக்கு முந்தைய காலத்திற்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.

இந்த நடைமுறையின்படி, அமலாக்கம் தாமதமானாலும், 2026 ஜனவரி முதல் பலன்கள் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், விதிமுறைகளிலோ அல்லது அமைச்சரின் பதிலிலோ அதிகாரப்பூர்வ தேதி இல்லாததால், நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share