நாடு முழுவதும் சுமார் 1,800 விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 827 கோடி ரூபாய் பயணிகளுக்குத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மாதம் தொடக்கம் முதலே, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்ச விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம், கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, டிசம்பர் 15 வரை டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு ரூ.827 கோடி திருப்பி செலுத்தியிருப்பதாகவும், மீதமுள்ள பணத்தைத் திரும்ப கொடுப்பதற்கானபணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும், விமான சேவையை மீட்டெடுத்து 1800 விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ரத்து செய்தல் வெகுவாகக் குறைந்துள்ளது. சரியான நேரத்தில் விமானச் சேவை (OTP) 90% ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 4500 உடைமைகள் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள உடைமைகள் 36 மணி நேரத்தில் ஒப்படைக்கப்படும். சிக்கித் தவித்த பயணிகளுக்கு 9,500 ஹோட்டல் அறைகள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட டாக்சிகள், பேருந்துகள் மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பல்வேறு ஆதரவு சேனல்கள் வழியாக ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம்” என்றும் கூறியுள்ளது.
முன்னதாக புதிய விமானப் பணிநேர வரம்பு (FDTL) விதிகள் நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்ததால், விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
