சென்னையில் 24 காவல் உதவி ஆணையர்கள் உட்பட தமிழ்கம் முழுவதும் 88 காவல்துறை அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 30-ந் தேதி மாநிலம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். டாக்டர் மகேஷ்வர் தயாள் சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகவும், பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராகவும், அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து 88 காவல் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை பெருநகர காவல்துறையில் மட்டும் 24 உதவி ஆணையர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிண்டி உதவி ஆணையராக இருந்த டி. விஜயராமுலு சென்னை காவல்துறை ஆவணக் காப்பகப் பிரிவுக்கும், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த எம்.எஸ். பாஸ்கர் விருகம்பாக்கத்திற்கும், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இருந்த எஸ். சங்கரநாராயணன் சென்னை காவல்துறையின் வடக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், ராயபுரம் உதவி ஆணையராக இருந்த ஐ. ராஜ்பால் நுண்ணறிவுப் பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த பி. பால் ஸ்டீபன் சென்னை திருமங்கலத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
