நேபாளத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 14 பேர் உள்பட 16 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அவர்கள் மனகாமன கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, மலை பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ் சாஹித் லகான் என்ற கிராம பகுதியில் கந்தார் என்ற இடத்தில், 200 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ரோடு ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நேபாள நாட்டு மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொள்ளச்சி மற்றும் தேவ கோட்டையை சேர்ந்த முத்துக்குமார், மீனாட்சி, சிவகாமி, மீனா, விஜயாள் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
