மாணவர்கள் மதிய உணவருந்தி கொண்டிருந்த சமயத்தில் மருத்துவ கல்லூரி விடுதியின் மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்ததில் ஏராளமான பயணிகளுடன் படுகாயமடைந்த 5 மாணவர்களும் உயிரிழந்தனர். 5 MBBS students who were eating died by Plane crash
அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அடுத்த நிமிடங்களில் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்த அந்த விமானம், அகமதாபாத்தின் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது சிதறியது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதே போன்று விபத்து ஏற்பட்ட அந்த நேரம் சரியாக உணவு இடைவேளை என்பதால், அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட இளம் மருத்துவ மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விமானம் வந்து மோதியதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நான்கு இளங்கலை மற்றும் ஒரு முதுகலை பட்டதாரி மாணவர்கள் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

மேலும் தற்போது விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதியின் விமானம் சொருகி இருப்பதையும், உணவகத்தில் இருந்த மேஜைகள், சாப்பாட்டுத் தட்டுகள், டம்ளர்கள் சிதறி கிடக்கும் காட்சிகளும் விபத்தின் கொடூர காட்சிகளாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் BJ மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் ஷியாம் கோவிந்த், “நானும் எனது ஜூனியர் மருத்துவரும் காயமடைந்துள்ளோம். 30-40 இளங்கலை மருத்துவர்களும் காயமடைந்துள்ளனர், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்றார்.
FAIMA மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி குறித்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். பிஜேஎம்சி, விடுதியில் விமானம் நொறுங்கியதை அறிந்ததும் செய்திகள் மிகவும் கொடூரமாகிவிட்டன, மேலும் பல MBBS மாணவர்களும் காயமடைந்துள்ளனர்! நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எந்த உதவிக்கும் தயாராக இருக்கிறோம்!” என்று தெரிவித்துள்ளது.