தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில், இருதுறை செயலாளர்களும் இன்று (மே 25) ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதப்படை காவலர் ஆறுமுகப்பாண்டி அரசு பேருந்தில், டிக்கெட் எடுக்கமாட்டேன் என்று நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி, போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை, நெல்லை, ஈரோடு என 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
காவல்துறையினர் பழிவாங்கும் நடவடிக்கையாக திட்டமிட்டு இதை செய்கின்றனர் என போக்குவரத்து துறையும், சட்டம் அனைவருக்கும் சமம்தான் என்று காவல்துறையும் கூறி வருகின்றன.
இந்தநிலையில் போக்குவரத்து துறை, காவல் துறைக்கு இடையே ஏற்படும் மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதின.
இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தசூழலில், உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று இருதுறை செயலாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
போக்குவரத்து மற்றும் காவல் துறை இடையே நடந்துவரும் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6ஆம் கட்ட தேர்தல்… 25.76% வாக்குப்பதிவு : வாக்களித்த அரசியல் தலைவர்கள்!
அமரன் டீமுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து!
