உலகின் மிகவும் பிரபலமான டிக்டாக்கர் கேபி லேம், கைதாகி விடுதலை செய்யபட்ட நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். world’s most popular TikToker Khaby Lame is forced to leave US
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்தவர் கேபி லேம். 25 வயதான லேம், தனது 1 வயதிலிருந்தே இத்தாலியில் வசித்து வருகிறார். தனது இளம் வயது முதல் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், ’ஏன் இவ்ளோ கஷ்ட படுறீங்க… இத ஈசியாவே பண்ணலாமே’ என்ற பாணியில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகின. அவை பெரும்பாலும் பல மில்லியன் பார்வைகளை கடந்தன.
ரசிகர்கள் பெருக, வருமானமும் குவிய உலகின் மிக பிரபலமான டிக்டாக்கராக அவர் உருவெடுத்தார். மேலும் பேஷன் பிராண்டுகளுக்கான விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். Bad Boys: Ride or Die என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார்.
அமெரிக்கா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்களை சித்தரிக்கும் ஸ்ட்ரீமிங் சேவையான டூபியில், ’கேபி இஸ் கம்மிங் டு அமெரிக்கா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தார்.
அதற்காக அமெரிக்கா சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அங்கேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் கேபி லேம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பிரபல டிக் டாக்கடான போ லௌடன் தனது எக்ஸ் பக்கத்தில் புகார் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக லெளடன் கருதப்படுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பிற்காக அவர் இளைஞர்களிடம் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அவர் அளித்த புகாரின்படி லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க குடியேற்ற முகவர்களால் கேபி லேம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனை ஐசிஇ எனப்படும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை உறுதி செய்தது.

ICE இன் அறிக்கையின்படி, லேம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அமெரிக்காவிற்குள் நுழைந்தார் . அவர் விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்தது தெரிய வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நாட்டை விட்டு வெளியேற அவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் அமெரிக்காவில் இருந்து வெளியேறியது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதே வேளையில் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க டிக்டாக்கர் லளெடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர், “கேபி லேம் ஒரு சட்டவிரோத நபர் என்பதை நான் கண்டுபிடித்தேன். இதுதொடர்பாக நான் புகார் அளித்திருந்த நிலையில் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.