திருப்புவனம் போலீசாரின் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, திமுக சார்பில் நிதி உதவி வழங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Udhayanidhi Stalin Ajithkumar DMK
அஜித்குமார் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசு பணிக்கான நியமன கடிதத்தை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வழங்கினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தில் உள்ள அஜித்குமார் வீட்டுக்கு இன்று ஜூலை 2-ந் தேதி இரவு சென்றார். அஜித்குமாரின் தாயாரின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார் விஜய். மேலும் அஜித்குமாரின் தாயாரிடம் தவெக சார்பில் ரூ.2 லட்சம் நிதியை வழங்கினார் விஜய்.
இதனிடையே திமுக சார்பில், உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிதியை அஜித்குமார் குடும்பத்தினரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அல்லது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி வழங்கக் கூடும் என்கின்றன திமுக வட்டாரங்கள்.