உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை ( Strait of Hormuz ஹோர்முஸ் நீரிணை) மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Strait of Hormuz Iran India
அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்- ஈரான் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை ஓமன் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. ஈரானுக்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்குவதாக ஓமனும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி அல்லது ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஹார்முஸ் நீர்முனை என்பது பெர்சியன் வளைகுடா அல்லது அரேபியன், ஓமன் வளைகுடாவின் நடுவில் உள்ள பகுதி. பெர்சியன் வளைகுடாவின் ஒரு பகுதியில் ஈரான் உள்ளது. ஒருமுனையில் குவைத் அமைந்துள்ளது. பெர்சியன் வளைகுடாவின் மற்றொரு பகுதியில் பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகமானது இந்த பெர்சியன் அல்லது அரேபியன் வளைகுடாவில் ஹார்முஸ் நீர்முனை வழியாகவே நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் நீர்முனையை கடந்து அரபிக் கடல் வழியாக உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்கின்றன.
தற்போது அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்முஸ் நீர்முனை வழியாகவே பெறப்பட்டு வருகிறது. இந்தியா நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்த ஹார்முஸ் நீர்முனை வழியாக இறக்குமதி செய்கிறது.
தற்போது ஹார்முஸ் நீர்முனையை ஈரான் மூடிவிட்டால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக கடுமையாக பாதிக்கப்படும்; இதனால் மிக அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படும் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள்.