பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வராமல் இருந்தது தொடர்பான சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த விளக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களை கொந்தளிக்க வைத்தது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பிப்ரவரி 4-ந் தேதி பதிலளிப்பார் என கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. பிரதமர் மோடியின் பதில் உரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா நிறைவேற்றினார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மக்களவையில் பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்பது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா இன்று பிப்ரவரி 5-ந் தேதி விளக்கம் அளித்தார். அப்போது, “பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என நான்தான் கூறினேன். பிரதமர் மோடி அவைக்குள் வந்தால் அவரது இருக்கையை முற்றுகையிட்டு விரும்பத்தகாத சம்பவங்களை நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்தனர். நேற்றே சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் வழக்கத்துக்கு மாறாக நடந்து கொண்டனர். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இந்தியாவின் ஜனநாயக மாண்புகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்; அதனால்தான் மோடியை அவைக்கு வரவேண்டாம் என்றேன்” என விளக்கம் அளித்தார் ஓம் பிர்லா.
சபாநாயகர் ஓம்பிர்லாவின் இந்த விளக்கத்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொந்தளித்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு ஏற்க முடியாதது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
