23 ஆண்டுகளாக ஓடும் ரத்த ஆறு : யார் இந்த வெள்ளை காளி?

Published On:

| By Kavi

rowdy Madurai Vellai Kali

பெரம்பலூர் அருகே நேற்று ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெள்ளை காளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு சென்னைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து இரண்டு கார்களில் ரவுடி கும்பல் வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், போலீசார் பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை பகுதியில், சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

அப்போது அந்த கும்பல் வெள்ளை காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நிலையில், அவருக்கு எதுவும் ஆகாத வகையில் போலீசார் பாதுகாத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் வெள்ளை காளிக்கு எதுவும் ஆகவில்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் அரிவாளை கொண்டு வெட்ட முயன்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று போலீசார் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து தற்காத்துக் கொள்ள இந்த எஸ்கார்டுக்கு தலைமை தாங்கி வந்த எஸ்ஐ துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்..

ADVERTISEMENT

rowdy Madurai Vellai Kali

இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது.

போலீஸ் பாதுகாப்பில் இருந்த போதும், ரவுடி வெள்ளை காளியை கொல்ல முயன்றிருக்கின்றனர் என்றால்… யார் இவர்? இவர் மீது என்னென்ன வழக்குகள் உள்ளது? இவரைக் கொல்ல முயன்றது யார்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

யார் இந்த வெள்ளை காளி?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அரியமங்கலம் ஊராட்சியில் உள்ள கருத்தரிவான் குக்கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியும், அரியமங்கலத்தைச் சேர்ந்த வி.கே. குருசாமியும் நெருங்கிய உறவுக்காரர்கள். மறவர் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் இருவரும் தனி தனியாக குடியேறினார்கள்.

ஆரம்பத்தில் வி.கே. குருசாமி திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர். கட்டப்பஞ்சாயத்து செய்துவந்தார். திமுக ஆட்சி காலத்தில் வி,கே.குருசாமி, மதுரை கிழக்கு மண்டல சேர்மேனாக செயல்பட்டார்.

ராஜபாண்டி அதிமுக ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவர், அதிமுக மதுரை கிழக்கு மண்டல சேர்மேனாக செயல்பட்டார். இதில், மதுரை கிழக்கில் கட்சி கொடிகள் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவதில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தன.

23 ஆண்டுகளாக நடக்கும் பழிக்கு பழி  கொலைகள்

இந்தநிலையில் 2003ல் ராஜபாண்டி ஆதரவாளரும் உறவினருமான சின்ன முனுசு என்ற முனுசாமியை வி.கே.குருசாமி ஆட்கள் கொலை செய்தனர்.

இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் முனுசாமியின் தம்பியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைகாளி, வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களான மூர்த்தி, ரமேஷ், மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் 2008ல் கொலை செய்தார்.

அதைத்தொடர்ந்து வி.கே.குருசாமியின் தங்கையின் கணவர் பாம்பு பாண்டியும் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைகளுக்கு பழிக்கு பழி வாங்க, வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள், ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை 2015ல் கொலை செய்தனர்.

இந்த கொலைக்கு பழி வாங்க, அதே 2015ல் ராஜபாண்டி தரப்பு, வி.கே.குருசாமி ஆதரவாளரான பெரிய முனுசாமியை கொலை செய்தார்.

தொடர்ந்து, 2016ல் வி.கே.குருசாமி மருமகனான காட்டுராஜா என்கிற முத்துராமலிங்கத்தை கொலை செய்தனர் ராஜாபாண்டியின் ஆதரவாளர்கள்.

2017ல் ஜூன் மாதம் ராஜபாண்டி மகன் முனுசாமி என்ற தொப்பிலியை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து வி.கே.குருசாமி ஆதரவாளர்கள் எரித்துவிட்டனர்.

இதனால் ராஜபாண்டி ஆதரவாளர்கள், வி.கே.குருசாமி குடும்பத்தை குறிவைத்து, அவரது மருமகனான எஸ்.எஸ்.பாண்டியனை கொலை செய்தனர்.

இதுபோன்று இரு பக்கமும் தொடந்து கொலைகள் நடந்து வந்ததால், அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதானத்துக்கு ஒத்துக்காத வெள்ளை காளி

அப்போது வி.கே.குருசாமி, ‘முனுசாமி தம்பியும் ராஜபாண்டி ஆதரவாளருமான வெள்ளைக்காளிக்கு நான் 2 கோடி ரூபாய் கொடுத்துவிடுகிறேன். இனி கொலைகள் வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், வெள்ளைக்காளி, “எங்களுக்கு பணமெல்லாம் வேண்டாம். வி.கே.குருசாமியை போட்டுவிட்டு, அந்த குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக்கிறேன். வாங்கிக்க சொல்லுங்கள். அப்படி வேண்டுமானால் சமாதானம் ஆகலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவல் குருசாமி காதுக்கு சென்றதும், அவர் தன் ஆதரவாளார்களுடன் சேர்ந்து ராஜபாண்டியையும் வெள்ளைகாளியையும் கொலை செய்ய திட்டமிட்டார்.

இதை தெரிந்துகொண்ட வெள்ளைகாளியும், ராஜபாண்டியும் உஷாராகி, வி.கே.குருசாமியை போட்டுத்தள்ள திட்டமிட்டனர். இதுபோன்று, மீண்டும் இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு நேரம் பார்த்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் 2023 செப்டம்பர் மாதம் வி.கே.குருசாமி மதுரை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு சென்றார். பெங்களூருவில் கம்மன்னஹல்லி சத்சாகர் ஓட்டலில் தங்கியிருந்த வி.கே.குருசாமியை, இங்கிருந்து பின்தொடர்ந்து சென்ற 10 பேர் கொண்ட கும்பல் தலை முகத்தை சிதைத்துவிட்டு, இறந்துவிட்டார் என்று நினைத்து சென்றுவிட்டனர்.

இந்தசூழலில் குருசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மதுரையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார். தற்போது வரை முகத்தை எங்கும் காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்த சூழலில், வெள்ளைக் காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். எனினும் கூலிப்படை மூலம் சிறையில் இருந்தே அவர் குற்றச்செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு (22.03.2025) ராஜபாண்டி தரப்பு, வி.கே.குருசாமிக்கு வலதுகரமாக இருந்த அவரது சகோதரி பையனான கிளாமர் காளி என்ற காளீஸ்வரனை கொலை செய்தது. இந்த வழக்கிலும் வெள்ளை காளியை போலீசார் சேர்த்தனர்.

rowdy Madurai Vellai Kali

எத்தனை கொலைகள்?

மொத்தமாக வெள்ளை காளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள நீதிமன்றங்களில் வெள்ளை காளியை ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றபோது, இவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் இவர்களை பின்தொடர்ந்து இரண்டு கார்களில் வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கியுள்ளது.

அப்போது வெள்ளை காளிக்கு எதுவும் ஆகாமல் போலீசார் தடுத்துள்ளனர். எனவே விடாத அந்த கும்பல் அரிவாளுடன் வந்து வெட்டியுள்ளது.

அந்த சமயத்தில் எஸ்கார்டு போலீசாருக்கு தலைமை தாங்கி வந்த எஸ்ஐ துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி உள்ளது.

தற்போது அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் வந்துள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரம்பலூரில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கும் அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share