அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். what happend to cm mk stalin
உங்கள் வீடு தேடி வரும் அரசு என்ற பெயரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட நெற்குன்றத்தில் இன்று (ஜூலை 23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு முகாம்களை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “முதல்வர் நலமாக இருக்கிறார். அவருக்கு மயக்கம் ஏற்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக அவரது சகோதரர் மு.க.முத்து மரணமடைந்தார். அவரை அடக்கம் செய்யும் வரை முதல்வர் நின்றுகொண்டு வருபவர்களுக்கு கைக்கொடுத்து கொண்டே இருந்தார். காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தார்.
இதைமுடித்துவிட்டு மறுநாள் காலையில் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்திருக்கிறார். அதன் பின்னர்தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யபடுவார் என மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்படும்” என்று கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைச்சுற்றல் காரணமாக நேற்று முன்தினம் (ஜூலை 21) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று தேனாம்பேட்டை அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தவாறே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக மா.சுப்பிரமணியன் அப்போலோவுக்கு சென்று முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. what happend to cm mk stalin