நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஜூலை 23-ந் தேதி இந்தியா கூட்டணி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். Parliament
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க ‘இந்தியா கூட்டணி’ எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதை மத்திய அரசு நிராகரித்து வருகிறது.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இன்றும் 2-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். பீகார் விவகாரம் உள்ளிட்டவைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுகவின் டிஆர் பாலு, ஆ.ராசா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் கறுப்பு உடையுடனும் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கறுப்பு துண்டு அணிந்தும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
