ராஜன் குறை What do Aryan political leaders desire
ஆரியம், திராவிடம் என்று பேசினாலே முகத்தைச் சுளிக்கும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ரேசிஸம் எனப்படும் இனவாதத் தன்மை கொண்ட பேச்சு இது என்று நினைக்கிறார்கள். உடற்கூறு மற்றும் மரபணு அடிப்படையில் மனித இனத்தை பல இனங்களாக வகைப்படுத்திய இனவியல் கோட்பாட்டை மானுடவியல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னெடுத்தது. அவ்வாறு செய்வது தவறானது, பிற்போக்கானது என்று உணரப்பட்டு இருபதாம் நூற்றாண்டில் முற்றாகக் கைவிடப்பட்டுவிட்டது. இன்றைய மரபணு ஆய்வுகள் பெருமளவு மனித இனங்களுக்குள் கலப்பு நடந்திருப்பதைக் கூறுகின்றன. இதையெல்லாம் மனதில் கொண்டு ஆரியர், திராவிடர் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது என்று நினைப்பதால் அந்த சொற்களை அரசியலில் பயன்படுத்துவது தவறு என்று நினைக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்துதான் ஒரு பண்பாட்டு அரசியல் முரணை முன்னிலைப்படுத்த அந்த சொற்களை இந்த கட்டுரையும் சரி, பொதுவாக நான் எழுதும் கட்டுரைகளும் சரி கையாள்கின்றன. What do Aryan political leaders desire
ஆரிய அடையாளம் என்பது உடற்கூறு அடிப்படையிலான இன அடையாளம் அல்ல என்று மாக்ஸ்முல்லரே அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். அது சமஸ்கிருத மொழியை உருவாக்கி பயன்படுத்தியவர்களைக் குறிக்கும் சொல். ஆரியம் என்பதன் பண்பாட்டு அடிப்படையாக சமஸ்கிருத மொழியைக் கூறலாம். அதே போல திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மொழி தமிழ். திராவிடப் பண்பாட்டின் முக்கிய வெளிப்பாடு. இப்படி மொழிகளை வைத்து இனம் காணும்போதும் பலர் உடனடியாக இரண்டு மொழிகளுக்கும் உள்ள கலப்பினை சுட்டிக் காண்பிப்பார்கள். இந்த மொழிகளுக்கிடயே இருந்த பன்னெடுங்காலத் தொடர்பில் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் பகிரப்பட்டுள்ளன என்றும் கூறலாம். அப்படியானால் எதற்காக அரசியலில் ஆரிய, திராவிட பண்பாடுகளை எதிர் நிறுத்தவேண்டும் என்ற கேள்வி எழலாம். எழுகின்றது. அதற்கான முக்கிய காரணம் வர்ண தர்மம். What do Aryan political leaders desire
ஆரிய மொழியில் பார்ப்பனர்களால் பொது ஆண்டு முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மனுசுமிருதி துவங்கி பல்வேறு பிரதிகளில் நிலைநிறுத்தப்பட்ட நால்வர்ண சமூகம் மற்றும் சிந்தனை, அந்த நால்வர்ணத்தில் அடங்காத அவர்ணர்களான தலித் சமூகங்கள் ஆகியவை பல்வேறு பேரரசு உருவாக்கத்திலும் வலுப்பெற்று பெரும்பாலான இந்திய சமூகங்களின் கட்டமைப்பாக மாறியது. இதனை பார்ப்பனீய சமூக அமைப்பு, Brahminical Social Order என்றழைப்பதில் தவறில்லை. இது ஜாதீய ஏற்றத்தாழ்வுகளின், அடிப்படையிலான உழைப்புச் சுரண்டலின் விளைநிலம்.
இது போன்ற மூவடுக்கு அசமத்துவம் உலகின் பல்வேறு நிலவுடமை சமூகங்களிலும் உருவானதை பொருளாதார வரலாற்றாளரான தாமஸ் பிக்கெட்டி எடுத்துரைக்கிறார். பூசாரி வர்க்கம், நிலப்பிரபுத்துவ வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்ற பிரிவினை பல வடிவங்களில் உலகெங்கும் நிலவத்தான் செய்தது. இந்திய வர்ண தர்மத்தின் வித்தியாசம் என்னவென்றால் இதனை மறுபிறவிக் கோட்பாடுடன் பிணைத்து, கீழ் வர்ணங்களில் பிறப்பது முற்பிறவியில் செய்த பாவத்தால் என்று சொன்னது. ஆன்மாவிற்கு வர்ணம் கிடையாது. அது பிறக்கும் உடலுக்குத்தான் வர்ணம் என்னும்போது அகமணமுறை இன்றியமையாததாக மாறுகிறது. ஒரே வர்ணத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் இணைந்தால்தானே தண்டிக்கப்படும் ஆன்மா அந்த வர்ணத்தில் பிறக்க முடியும்? அதனால் பிறப்பையே தண்டனையாக்கி, மொத்த வாழ்வையும் ஏற்றத் தாழ்வையும் பிறப்பிலேயே தீர்மானிக்கும் முறை வேறெந்த சமூகத்தையும் விட இறை நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்டதாக இந்தியாவில் மாறியது. சமஸ்கிருத இதிகாசங்கள், புராணங்களில் எல்லாம் வர்ண தர்மத்தை வலியுறுத்தும் கதையாடல்கள் இடம்பெற்றன.
இந்திய சமூகங்கள் நவீன காலத்தில் நுழைந்தபோது பல்வேறு சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள். ஆனால் அவர்கள் யாருமே வர்ண தர்மத்தை முற்றாக நிராகரிக்க முன்வரவில்லை. அது ஒரு வேலைப்பிரிவினைதான், காலப்போக்கில் ஜாதீயமாக திரிந்துவிட்டது என்று சப்பைக் கட்டு கட்டினர். மனுசுமிருதி தெள்ளத்தெளிவாக பிறப்பே தண்டனை என்று கூறியிருந்ததை எதிர்கொண்டு கண்டிக்கத் தவறினர். இதனால் வர்ண சிந்தனையிலிருந்து உருவான ஜாதீய சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகின்றது. உதாரணமாக இன்று வரையிலும் பிராமணர்களை தமிழில் பார்ப்பனர்கள் என்று கூறக்கூடாது என்று சொல்பவர்கள் பிராமண அடையாளம் என்பது வர்ண அடையாளமா, ஜாதி அடையாளமா என்பதைக் கூடத் தெளிவுபடுத்த மறுக்கிறார்கள். What do Aryan political leaders desire
இந்த நிலையில்தான் ஆரிய பண்பாட்டிற்கு மாற்றுப்பண்பாடாக திராவிட-தமிழ் பண்பாட்டை அரசியல் ரீதியாக முன்னிறுத்தும் தேவை எழுந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே வேர்கொண்ட இந்த திராவிட-தமிழ் சமத்துவ சமூகச் சிந்தனை இருபதாம் நூற்றாண்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நவீன பொதுமன்றத்தில் வேர்கொண்டது. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா, கலைஞர் ஆகியோரின் தன்னிகரற்ற பிரசாரத்தில் திராவிட-தமிழர் என்ற அரசியல் மக்கள் தொகுதியை தன்னுணர்வு பெறச் செய்து தமிழ்நாட்டு அரசியலை வடிவமைத்தது. அது நவீன தமிழ்நாட்டின் தனித்துவமிக்க வளர்ச்சிப் பாதைக்கு, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்தது.

ஆரியத்தின் பதட்டம் What do Aryan political leaders desire
திராவிட-தமிழ் அடையாளம் கொண்ட மக்கள் தொகுதியின் தனித்துவமிக்க அரசியல் பிரிவினைவாதத்திற்கு இட்டுச்செல்லும் என்று அஞ்சுவதாகத்தான் பொதுவாக ஆரிய சிந்தனையாளர்கள் சொல்வார்கள். இது திராவிட எதிர்ப்பின் வெளிப்பாட்டு வடிவம் என்றாலும், அதன் உள்ளடக்க வடிவம் வேறு. அது எங்கே திராவிட பண்பாட்டின் எழுச்சி இந்தியா முழுவதிலும் பரவி பார்ப்பனீய சமூக அமைப்பைத் தகர்த்துவிடுமோ, வர்ண தர்மத்தை முற்றாக நிராகரித்து ஏகவர்ண சமூகத்தை உருவாக்கிவிடுமோ என்பதுதான். இன்று வரையில் இந்த ஏற்றத்தாழ்வு அமைப்பினை காத்து நிற்பது அகமணமுறைதான். திராவிட பண்பாடு உண்மையிலேயே அரசியல் மூலமாக புதிய சமத்துவத் தன்னுணர்வை உருவாக்கினால் இந்தியாவின் பழைய சமூக அமைப்பு குலைந்துவிடும். பார்ப்பனீய இந்து மதமே இந்தியாவின் அரசியலின் மூலாதாரமாக விளங்க வேண்டும் என்று நினைக்கும் இந்துத்துவத்திற்கு, அந்த பண்பாட்டிற்கு மாற்றான ஒரு தொன்மையான மாற்றுப் பண்பாட்டு அடையாளம் பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த சவாலை எதிர்கொள்ள ஆரிய பண்பாட்டு ஆதரவாளர்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருவதைக் காண முடியும். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகமே அவர்களது முதல் எதிரியாக இருந்து வருகிறது. துக்ளக் ஆசிரியரும், இந்திய அரசியலில் பெரும் செல்வாக்குள்ளவருமான குருமூர்த்தி தி,மு.க நெருப்பு, அதனை அணைக்க “சாக்கடை ஜலத்தையும்” (அதாவது வேறு சில ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளையும்) பயன்படுத்தலாம் என்று கூறியது கருதத்தக்கது. அவர் உவமையாகக் கூறினாலும், ஏன் தி.மு.க-வை அவர் எப்பாடு பட்டாவது அணைக்க வேண்டிய நெருப்பு என்று கருதுவேண்டும் என்பதே கேள்வி. What do Aryan political leaders desire
தி.மு.க-வை வீழ்த்த ஆரிய அரசியல் சூத்ரதாரிகள் செய்யும் முயற்சிகளை மூன்று வகையானதாக நாம் காணலாம். What do Aryan political leaders desire
- பகுத்தறிவை மத நிந்தனையாகச் சொல்லி இறை நம்பிக்கையாளர்களை தி.மு.க-விற்கு எதிராக திரட்டுவது: What do Aryan political leaders desire
- மாநில சுயாட்சி, மாநில அடையாளம், உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளை பிரிவினைவாதம் என்று சொல்லி அச்சுறுத்துவது.
- சமூக நீதிக்காக இட ஒதுக்கீடு குறித்து பேசுவதை, ஜாதி அடையாள அரசியலாக மாற்றி முற்போக்கு சக்திகளை பிளவுபடுத்துவது.
இம்மூன்றையும் உதாரணங்களுடன் நாம் காண வேண்டும்.
பகுத்தறிவும் மத நிந்தனையும்
மூட நம்பிக்கை எதிர்ப்பை, பார்ப்பனீய, ஜாதீய சிந்தனை எதிர்ப்பை, அதற்குத்தேவையான பகுத்தறிவு நோக்கைப் பேசுவதை இறை நம்பிக்கைக்கு எதிரானது என்று கட்டமைத்து, இந்துக்களுக்கு எதிரானவர்கள், ஆத்திகர்கள் மனம் புண்படுகிறது என்று சொல்வது ஆரியத்தின் முயற்சிகளுக்குள் முக்கியமானது. What do Aryan political leaders desire
உதாரணமாக பெரியாரின் இயக்கம் பார்ப்பனீய மேட்டிமைவாதத்தைதான், ஜாதீய விலக்கங்களைத்தான் முழுமூச்சாக எதிர்த்தது. அதனை நேரடியாக எதிர்கொண்டு வர்ண தர்மம் குறித்த தங்களது தற்போதைய கருத்தென்ன, எப்படி சமூக நடைமுறைகளை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவது என்று பேசுவதற்குப் பதிலாகப் பெரியார் பார்ப்பனர்களை வெறுக்கிறார் என்று பொய்யாகத் திரித்தனர். பகுத்தறிவை வளர்ப்பதற்காக புராணங்களிலுள்ள பக்குவமற்ற கதைகளை கேள்வி எழுப்புவதை மத நிந்தனையாக சித்தரித்தனர். What do Aryan political leaders desire

இதன் மிகச்சிறந்த உதாரணம் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் படம் அவமதிக்கப்பட்டது என்று துக்ளக் பத்திரிகை முன்னெடுத்த பிரசாரம். அதை வைத்து 1971 தேர்தலில் தி,மு.க-வை வீழ்த்திவிடலாம் என்று நம்பினார்கள். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அண்ணா தனிப்பட்ட இறை நம்பிக்கையை எதிர்க்க வேண்டியதில்லை என்பதற்குத்தான் “ஓன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். இதன் பொருள் மனித குலத்தில் யார் எந்த தெய்வத்தை வணங்கினாலும், வழிபட்டாலும் அதன் மூலப்பொருள் ஒன்றே என்பதுதான். காந்தி “ஈஸ்வர அல்லா தேரோ நாம்” என்று பாடியதைப் போலத்தான்.
மாநில சுயாட்சிக் கோரிக்கையை பிரிவினைவாதம் என்று கூறுவது What do Aryan political leaders desire
தி.மு.க பிரிவினைவாதம் பேசுகிறது என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறும் கோயபல்ஸ் பிரசாரம் இன்றும் தொடர்கிறது. தொடக்கம் முதலே தி.மு.க கூட்டாட்சிக் குடியரசு என்ற சிந்தனையைத்தான் வலியுறுத்தி வந்துள்ளது. அது திராவிட நாடு என்ற கூட்டாட்சிக் குடியரசானாலும் சரி, இந்திய கூட்டாட்சிக் குடியரசானாலும் சரி மாநில சுயாட்சி முக்கியம் என்பதே அதன் கொள்கை எனலாம். What do Aryan political leaders desire
இப்படியிருந்தும், இலங்கை தமிழரின் சுயாட்சி உரிமைகளுக்காக தி.மு.க குரல் கொடுத்ததை அங்கு சில இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவாகக் கூறினார்கள். தி.மு.க உச்சபட்சத் தீர்வான சுதந்திரத் தமிழ் ஈழம் மட்டும்தான் ஒரே தீர்வு என்று கருதவில்லை என்பதை கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் விளக்கியுள்ளார். ஆனாலும் 1989-ஆம் ஆண்டு அமைந்த தி.மு.க அரசு, இலங்கைப் போராளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாகச் சொல்லி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று 1990-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அப்படி கலைத்தவர்கள் சட்டம், ஒழுங்கை அவர்கள்தானே பராமரித்திருக்க வேண்டும்? செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு ஈழப் போரளிகளால் படுகொலை செய்யப்பட்டார். வினோதமாக, ஏற்கனவே ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தி.மு.க அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. அந்த தேர்தலில் யாரோ செய்த செயலுக்காக தி.மு.க வரலாறு காணாத தோல்வி அடைந்தது.

இது போதாதென்று தி.மு.க-வை எப்படியாவது அரசியலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சிகள் தொடர்ந்து நடந்தன. ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது வீசிய அதிருப்தி அலையில், 1996-ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சி அமைத்தது. ஒன்றியத்தில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி ஆட்சி அமைந்தது. தி.மு.க அதில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதற்காக அந்த ஆட்சி கவிழ்க்கப் பட்டது. 1998-ஆம் ஆண்டு பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்த நிலையில் வாஜ்பேயி தலைமையிலான ஆட்சி அமைந்தது. ஜெயலலிதா தி.மு.க ஆட்சியை கலைக்கச் சொன்னதற்கு பாஜக இணங்கவில்லை. அதனால் சுப்ரமண்யம் சுவாமி ஒரு டீ பார்ட்டி வைத்தார். அதில் சோனியா காந்தியையும், ஜெயலலிதாவையும் பங்கேற்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதில் வாஜ்பேயி அரசு கவிழ்ந்தது.
இவ்வாறு தொடர்ந்து தி.மு.க குறிவைக்கப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அது பாஜக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குறைந்தபட்ச வேலைத்திட்டம் குறித்த நிபந்தனைகளுடன்தான் அந்த கூட்டணி அமைந்தது. ஆட்சியும் அமைந்தது. ஆனால் எவ்விதமான அழுத்தங்கள் காரணமாக தி.மு.க அந்த கூட்டணியை அமைத்தது என்ற வரலாற்றை மறைத்துவிட்டு ஒரு புறம் தி,மு.க மட்டும் பாஜக-வுடன் கூட்டணி வைக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்வியை ஒரு புறம் சிலர் கேட்டுக்கொண்டேயிருக்க, மறுபுறம் தி.மு.க பிரிவினைவாதக் கட்சி என்று வேறு சிலர் கூறுகிறார்கள். பிரிவினைவாதக் கட்சியுடன் ஏன் பாஜக கூட்டணி வைத்தது என்று யாரும் கேட்பதில்லை. இன்றைக்குப் புளிக்கும் திராவிடம் அன்றைக்கு பாஜக-விற்கு இனித்ததா என்று யாருக்கும் கேட்கத் தோன்றுவதில்லை.
சமூக நீதி அரசியலும், ஜாதி அடையாள அரசியலும்
சமூக நீதி அரசியலுக்குத்தான் தி.மு.க முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளதே தவிர, தனித்தனி ஜாதி அடையாளங்களை கொம்பு சீவிவிட்டு, ஜாதிகளின் கூட்டமைப்பாக மக்களை அணி திரட்டியதில்லை. ஆனால் பாஜக உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அவ்வாறான ஜாதி கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. பொது அடையாளத்தில் இயங்கும் கட்சிகளைப் பிளந்து, அந்த பிளவுகளை ஜாதி அடையாளத்தின் அடிப்படையில் தொகுக்கிறது. What do Aryan political leaders desire
திராவிட-தமிழர் என்ற மக்கள் தொகுதியை தன்னுணர்வு பெற்ற மக்கள் தொகுதியாகக் கட்டமைத்ததுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. அந்த தன்னுணர்வை சிதைத்து, ஜாதிகளின் தொகுப்பாக மாற்றும் வேலையைத்தான் ஆரிய அரசியல் சூத்திரதாரிகள் முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் ஜாதி அடையாளம் வலுப்பெறும் வரை அவர்களது பார்ப்பனீய சமூக அமைப்பிற்கு (Brahminical Social Order) எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கம்தான்.
இந்தியக் குடியரசின் முன்னாலுள்ள பெரும் சவால் எப்படி சம நீதி, சமூக நீதி என்ற குடியரசு விழுமியங்களை இந்த ஆரிய மாயையைக் கடந்து செயல்படுத்துவது என்பதுதான். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது சிந்தனைகளே ஆரிய மாயையை அகற்றும் விளக்குகளாகச் செயல்படக் கூடியவை. தமிழ்நாட்டில் திராவிட அரசியல் வெல்வது அந்த விளக்கின் வெளிச்சத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவச் செய்யும் எனலாம் . What do Aryan political leaders desire
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com What do Aryan political leaders desire