திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்ததாக தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் இருவரும் இன்று (மார்ச் 24) கையெழுத்திட்டனர்.
அதன்பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வெகு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். விரைவில் அவரவர் தொகுதிகளுக்கு சென்று மக்களை களத்தில் சந்திக்க இருக்கிறோம் என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை 5 பேர் கொண்ட குழு தேமுதிக சார்பில் அறிவிக்க இருக்கிறோம். இந்த குழுவை நாளைக்கே அழைக்க இருக்கிறார்கள். எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் இறுதி செய்யப்பட்டு, 27ஆம் தேதி அனைத்து வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.
தேமுதிக சார்வில் வரும் ஏப்ரல் 1 அன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம்.
கூட்டணி தர்மத்தை மதித்து கூட்டணி கட்சியினருக்காகவும் தேமுதிக உழைக்கும். இது மகத்தான வெற்றிக் கூட்டணி. நிச்சயம் வெற்றி பெறும்.
எந்தெந்த தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அதன் உத்தேச பட்டியலை வழங்கியிருக்கிறோம். நாளை எங்களின் 5 பேர் குழு ஆலோசனை செய்து, எங்களுக்கான தொகுதிகள் உறுதி செய்யப்படும்.
விஜயகாந்த் முதன்முதலில் வெற்றி பெற்ற விருதாசலம், அவர் எதிர்க்கட்சித் தலைவரான ரிஷிவந்தியம் , விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர், ஆம்பூர், குடியாத்தம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் உத்தேச பட்டியலில் உள்ளன. மொத்தம் 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளோம்.
நாங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளோம்” என்றார்.
