தமது பெயரில் எந்த ஒரு நற்பணி மன்றமும் தொடங்க வேண்டாம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்த போது, அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக சொல்லப்படும் WAR ROOM மிகப் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. தமிழக பாஜக தலைவர் பதவியை இழந்த பின்னர் , “ANNAMALAI ANBU KOOTTAM” என்ற பெயரில் அமைப்பு உருவாக்கப்பட்டு உறுப்பினர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
தற்போது திருநெல்வேலியில் அண்ணாமலை நற்பணி மன்றத்தை அவரது ஆதரவாளர்கள் தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.