சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான ‘கூமாபட்டி’ பிளவக்கல் அணைக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.10 கோடி நிதி குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளார். Kumapatti Pilavakkal Dam
சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிடப்பட்ட கூமாபட்டி குறித்த வீடியோ டிரெண்டிங்கானது. இந்த ரீல்ஸ் வெளியிட்ட தங்கபாண்டி என்ற இளைஞர், கூமாபட்டி பிளவக்கல் அணை மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது; ஆனால் என்ன பணிகள் நடந்துள்ளது என்பதே தெரியவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா அளித்துள்ள விளக்கம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு அணையில் ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.