விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கான தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.
விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இத்திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதற்கு எதிராக தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவா, அருள் முருகன் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இவ்வழக்கின் விசாரணை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவில் பிழைகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது. இதனையடுத்து திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று இன்று வழக்கு எண் வழங்கப்பட்டு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த சில நாட்களில் நடைபெறக் கூடும்.
