நான் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் போய் நிற்க முடியாது இல்லையா? அதனால்தான் என் சார்பாக என்னுடைய பிரதிநிதிகளாக, நானே பார்த்து பார்த்து எனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார். அவர் பேசுகையில், “இது வேட்பாளர்கைள அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று சொன்னார்கள். நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை இது மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது கட்சியினருக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இல்லை என்று சிலர் சொல்வார்கள்.
நம்முடைய வேட்பாளர்கள் எல்லோருமே ரொம்ப சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குப் பின்னால் பெரிய பேக் ரவுண்ட் எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்கிறேன். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். ஒரு எம்எல்ஏ என்பவர், சும்மா அனுபவத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பவராக இருக்கக் கூடாது.
அனுபவத்தை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக கல்குவாரிகளில் ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. அனுபவத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கும் பிரஸ் ரிப்போர்ட்டர்களை தாறுமாறாகத் தாக்குபவராக இருக்கக் கூடாது.
இன்னும் ஓபனாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த திமுகவில் இருந்து வந்த ஒரு எம்எல்ஏ மீது கொள்ளையடித்த கேஸ் உள்ளது, போதைப் பொருள் கடத்தல் கேஸ் உள்ளது, திருட்டு கேஸ் உள்ளது. திருட்டுக் கேசில் ஜெயிலுக்குப் போய் வந்த ஒருவர் இன்னும் அங்கே இருக்கிறார். நீங்கள் யோசிக்கலாம், அவர் யார் என்று. இன்னொரு உதாரணம் வேண்டுமானாலும் தருகிறேன். அந்தத் திருட்டுக் கேசில் உள்ளே போய்விட்டு வந்தவரை, யாருக்கு எதிராக இந்த திமுக தேர்தலில் நிற்க வைத்தது தெரியுமா? இன்று அவர்களின் கூட்டணியிலேயே மூச்சுக்கு 300 முறை முட்டுக் கொடுக்கிற ஒரு மிகப் பெரிய தலைவருக்கு எதிராக 1996-ல் இந்த எம்எல்ஏ-வை நிற்க வைத்தார்கள்.
மரியாதை நிமித்தமாக அந்தத் தலைவரின் பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் எம்எல்ஏ-க்களாக இருக்கிறார்கள்.
ஆனால் எம்எல்ஏ என்றால் சும்மா இல்லை. ஒரு தொகுதிக்கான அந்த மக்களுக்கான எல்லைக் காப்பாளர்கள்.. அப்படி இருக்க வேண்டும். களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் ஆட்களைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் போய் நிற்க முடியாது இல்லையா? அதனால்தான் என் சார்பாக என்னுடைய பிரதிநிதிகளாக, நானே பார்த்து பார்த்து எனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
நமது அக்கா, நமது தங்கை, நமது அண்ணா, நமது தம்பி என்று சொல்லி, நமது வேட்பாளர்களை செலக்ட் செய்து உங்கள் முன்னால் ஒப்படைக்கிறேன். மக்களை அவர்களை எம்எல்ஏ ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.”என்று தெரிவித்துள்ளார்.
