தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளராக, அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் அண்ணா நகர் கார்த்திக் மோகன் களமிறங்கிறார்.
அங்கு கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (மார்ச் 30) பிற்பகல் வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பெரம்பூர், கொளத்தூரை தொடர்ந்து மூன்றாவது தொகுதியாக வில்லிவாக்கம் சென்று ஆதவ் அர்ஜூனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருந்தார் விஜய்.
இதையொட்டி ஏராளமான பெண்களும், தவெக தொண்டர்களும் குவிந்திருந்தனர்.
ஆனால் திடீரென வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனு தாக்கல் மற்றும் பிரசாரத்திற்கு செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்கு கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்கு செல்லும் வழிகளில் தன்னிச்சையாக திரளும் பொதுமக்களுக்கும் சரியான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல் அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னை பெருநகர காவல்துறை செயல்படுத்தாதால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று இன்றைய அண்ணா நகர் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதனால் விஜய்யை காண வந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
