கரூரில் நடந்த பெருந்துயரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 12) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி இன்று காலை தனி விமான மூலம் டெல்லி வந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் சிபிஐ அலுவலத்துக்குள் சென்றார்.
அங்கு சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் விஜய்யிடம் தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கரூர் பிரச்சாரத்தின் போது 41 பேர் எப்படி இறந்தனர்?
கால தாமதமாக பிரச்சார இடத்திற்கு நீங்கள் வந்தது ஏன்?
அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதா?
காலதாமதமாக சரியான காரணங்களை காவல்துறைக்கு உங்கள் தரப்பில் இருந்து தகவலாக தெரிவிக்கப்பட்டதா? ஆகிய கோணங்களில் கேள்விகளை எழுப்பி, விஜய்யின் பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.
வழக்கமாக லோதி எஸ்டேட் பகுதியில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலக சாலையில் சுமார் 6 அல்லது 7 போலீசார் மட்டுமே காவலுக்காக இருப்பார்கள். ஆனால் இன்றைய தினம் விஜய் ஆஜராகி இருக்கும் நிலையில் சாலை முழுவதும் போலீசாரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சுமார் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசூழலில் விஜய்க்கு மதிய உணவு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற பேக்கில் வைத்து அவரது வழக்கறிஞர் மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முன்னதாக நீலம் மற்றும் பிங்க் நிற கூடையில் வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு விஜய்காக அவரது வாகனத்திலேயே எடுத்து வரப்பட்ட நிலையில் அந்த உணவானது தற்போது ஒரு பேக்குக்குள் வைத்து அவரது வழக்கறிஞர் சிபிஐ அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்றார்
உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய்யிடம் கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
நாளையும் விஜய்யிடம் விசாரணை தொடரும் என்று தகவல்கள் வருகின்றன.
