கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 29,30,31 ஆகிய தேதிகளில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து விஜய்யை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனை ஏற்று டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தற்போது விஜய் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
