மார்கன்: விமர்சனம்!

Published On:

| By christopher

vijay antony maargan movie review

ரசிக்கத்தக்க ‘த்ரில்லர்’ படமா?

சில திரைப்படங்களின் டீசர், ட்ரெய்லர் அவை குறித்த முன்னபிப்ராயங்களை ரசிகர்களிடம் உருவாக்கும். அவற்றை மீறிய திரையனுபவம் தந்தால், அப்படம் பெரிய வெற்றியைப் பெறும். அப்படியொரு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது விஜய் ஆண்டனி நடிப்பில், லியோ ஜான்பால் இயக்கத்தில் உருவான ‘மார்கன்’ பட டீசர் மற்றும் ட்ரெய்லர். தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ரசிகர்களின் முன்னபிப்ராயங்களைத் தகர்க்கிற வகையில், எதிர்பார்ப்புகளை விட ஒருபடி அதிகமான திரையனுபவத்தைத் தருவதாக உள்ளதா ‘மார்கன்’? vijay antony maargan movie review

’அமானுஷ்ய’ அனுபவம்! vijay antony maargan movie review

சென்னையில் ஒரு இளம்பெண் கொலையாகிறார். பின்னங்கழுத்தில் ஊசி குத்தப்பட்டதும், அப்பெண்ணின் உடல் முழுக்கக் கருப்படைகிறது. அடுத்த நாள் காலையில், அவரது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் ‘இது ஒரு மோசமான பிறந்தநாள்’ என்ற வாசகத்தோடு பிணமாகக் கிடக்கிற புகைப்படம் பதிவிடப்படுகிறது. இந்த செய்தி பலத்த அதிர்வை ஏற்படுத்துகிறது.

இந்த தகவல் அறிந்ததும் அதிர்ந்து போகிறார் மும்பை காவல் துறையைச் சேர்ந்த ஏடிஜிபி துருவ் (விஜய் ஆண்டனி). காரணம், சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகளும் அதே பாணியில் கொல்லப்பட்டதுதான்.

‘என்கவுண்டர்’ மூலமாகச் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் சிலரை அவர் சுட்டுத் தள்ளுகிறார். அந்த சம்பவத்தின்போது, அவரது கழுத்தில் அதே போன்றதொரு ஊசியைக் குத்துகின்றனர் சிலர். அதனால், அவரது உடலின் சில பாகங்கள் பாதிப்புக்குள்ளாகிறது.

மும்பையில் இருந்து சென்னை வரும் துருவ், இந்த வழக்கை ’அதிகாரப்பூர்வமற்ற முறையில்’ விசாரிக்கத் தொடங்குகிறார். அப்போது, தமிழறிவு (அஜய் தீஷன்) என்கிற இளைஞன் மீது அவரது சந்தேகப் பார்வை விழுகிறது.

அந்த நபரைப் பிடித்து விசாரிக்கையில், ‘குற்றம் நிகழ்ந்தது எப்படி’ என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்துக் கிடைக்கத் தொடங்குகின்றன.

அந்த பெண்ணைக் கொலை செய்தது தமிழறிவா அல்லது வேறு நபரா? கொலைக்கான காரணம் என்ன?

இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘மார்கன்’ படத்தின் மீதி.

தமிழறிவு சில அமானுஷ்ய அனுபவங்களை எதிர்கொள்வது, இந்தக் கதையில் ஒரு பகுதியாக உள்ளது. அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயார் எனும் மனநிலைக்கு ரசிகர்கள் வரும்போது, இப்படம் தரும் சுவாரஸ்யம் சிறப்பானதாக இருக்கும். அவை அவர்களது முன்னபிப்ராயங்களை உடைப்பதாகவும் இருக்கும்.

இயக்குனருக்கு ‘வெல்கம்’!

விஜய் ஆண்டனி இதில் நாயகன். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், திரையில் வந்து போயிருக்கிறார். அவரது கதைத் தேர்வுகள் வித்தியாசமானவை என்பதற்கான இன்னொரு உதாரணமாகியிருக்கிறது ‘மார்கன்’.

அஜய் தீஷன் இதில் அறிமுகம். காதல் காட்சிகளில் கொஞ்சம் ‘அமெச்சூர்’ ஆகத் தெரிந்தாலும், போகப் போக ஒரு பாத்திரமாகக் கதையில் ‘செட்’ ஆகியிருப்பது பாராட்டுக்குரியது.

அஜய் ஜோடியாக இதில் வந்து போயிருக்கிறார் தீப்ஷிகா. அவரது நடிப்பு மற்றும் இருப்பு வசீகரம்.

போலீஸ் அதிகாரியாக வரும் பிரிகிடா, படம் முழுக்க வந்தாலும் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

அஜய்யின் தங்கையாக வருகிறார் அர்ச்சனா. அவரும் ஒரு பாத்திரமாக இதில் வந்து போயிருக்கிறார்.

சமுத்திரக்கனி, வினோத் சாகர், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

கொலையாளியாக வருபவர் குறித்த விவரணை திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்திருக்கலாம். அப்பாத்திரத்தில் நடித்தவரின் விவரங்கள் அடுத்து வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்படத்தின் மிகப்பெரிய பளஸ் படத்தொகுப்பு. வழக்கமாக, இது போன்ற திரைக்கதைகள் அதிக நீளத்தைக் கொண்டிருக்கும். ஆனால், இப்படம் திரையில் 132 நிமிடங்களே ஓடுகின்றன.

அதற்காக, வழக்கத்தை விட அதிகமாகவே சில இடங்களில் கத்திரி போட்டிருக்கிறார் இயக்குனரும் படத்தொகுப்பாளருமான லியோ ஜான்பால்.

திரையில் வரும் படத்தைக் கற்பனை செய்தே அவர் திரைக்கதையை ஆக்கியிருப்பது சிறப்பு.

அதேநேரத்தில், விஜய் ஆண்டனி பாத்திரம் உட்படச் சில பாத்திரங்களின் பின்னணி போதுமான அளவுக்கு வெளிப்படவில்லையோ என்கிற உணர்வெழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

இரண்டாம் முறை பார்க்கையில், சில ‘த்ரில்லர்’ படங்கள் அபத்தமானதாகப் படும். இதில் அந்த குறை தெரியாது என்றே தோன்றுகிறது. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

அதே நேரத்தில், ‘போர் தொழில்’ போன்ற நேர்த்தியான திரையனுபவம் இதில் கிடைக்கவில்லை என்ற ஒப்பீட்டையும் தவிர்க்க முடியவில்லை.

லியோ ஜான்பால் உடன் இணைந்து விஷ்ணு இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

வெவ்வேறு களங்களில் பயணிக்கிற காட்சிகளுக்கு ஏற்ற பங்களிப்பைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. ஒரு கமர்ஷியல் படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்துகிற வகையில், ‘கலர்ஃபுல்’ பின்னணிக்கு வித்திட்டிருக்கிறார் கலை இயக்குனர் ஏ.ராஜா.

சொல்லிடுமா, உலகையே முழுவதும் வெறுக்கிறேன் பாடல்கள் சட்டென்று ஈர்ப்பைத் தருகின்றன.

அவற்றைக் கடந்து நிற்கிற வகையில், படத்திற்கு உயிரூட்டுகிற வகையில் இருக்கிறது விஜய் ஆண்டனியின் பின்னணி இசை.

இப்படத்தின் வழியே, ‘இவர் எதிர்காலத்தில் நல்லதொரு கமர்ஷியல் பட இயக்குனராக மிளிர்வார்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் லியோ ஜான்பால். அவரது தொழில்நுட்ப மேதைமையோடு விஎஃப்எக்ஸ் பங்களிப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவருக்கு ஒரு ‘வெல்கம்’.

இந்த படத்தில் வருகிற கஞ்சமலை சித்தர் கோயில், சூட்சம உடல் ரகசியம் போன்ற விஷயங்கள் ‘சூப்பர்நேச்சுரல்’ தன்மை கொண்டவை. அவற்றை ‘மர்டர் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ கதைக்குள் புகுத்தியிருக்கிறார் லியோ ஜான்பால். அந்த கலவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிலருக்கு படத்தின் முடிவு மிகச்சிறிதாக இருப்பதாகப் படலாம்.

அதேநேரத்தில், வித்தியாசமான கதைகளைத் திரையில் காண வேண்டும் என்பவர்களை ‘மார்கன்’ திருப்திப்படுத்தும். ரசிக்கத்தக்க த்ரில்லர் படமாகத் தெரியும்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share