லட்சக்கணக்கான தமிழர் மனதில் தன்மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான் என வைகோ பாராட்டி உள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 ஆவது குருபூஜை விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் ஒட்டு மொத்த கவனமும் இன்று (அக்டோபர் 30) பசும்பொன் பக்கம் திரும்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சீமான், வைகோ ஆகியோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
தவறை மறைக்க தங்க கவசமா?
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், என் தாத்தாவிற்கு தங்க கவசம் சாத்தியதை நான் வெறுக்கிறேன். வாழ்நாளில் ஒரு பொட்டு தங்கம் அணியாத மகான் அவர். சிலுக்கு ஜிப்பா போட்டதை வீசி விட்டு கதருக்கு மாறிய எளிய மகன் அவர். நீங்கள் ஏன் அவரை வாக்கு வாங்கும் ஒரு இயந்திரமாக மாற்றுகிறீர்கள். வழிபடுகிற தெய்வமாக பாருங்கள். நீங்கள் செய்த தவறை மறைக்க என் தாத்தாவை தங்கத்தில் மறைகிறீர்கள். அவர் நாடு பெற்றிருக்கும் சுதந்திரமே நிறத்தில்தானடா தங்கம் தரத்தில் இல்லை என்றார். அவரை போய் தங்கத்தில் மறைப்பதை பார்க்கும் போது கூசுகிறது என்றார்.
பின்னர் தேவர் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் நேரில் சந்தித்தனர். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான், லட்சக்கணக்கான தமிழர் மனதில் தன்மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான் என்றார். மேலும் நான் மருத்துவமனையில் இருந்த போது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல் நிலை சரியில்லாதபோது நான் அழைத்து நலம் விசாரித்தேன்.
என் அம்மா இறந்த போது கலிங்கப்பட்டி வீட்டிற்கு இரவோடு இரவாக வந்து விட்டார் சீமான். எங்கள் பயணம் தொடரும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
