ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கி இருப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். U.S. Warplanes Launch Fierce Attacks on Iran – Trump Applauds!
ஈரான் அணுசக்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகள், ஈரான் அரசின் முக்கிய அமைச்சரவை கட்டிடங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இஸ்ரேல் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி தந்து வருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஏவுகணைகள், கொத்து குண்டுகளை ஈரான் சரமாரியாக வீசி வருகிறது. இவற்றை அமெரிக்காவின் ஆதரவுடன், இஸ்ரேல் நடுவானிலேயே அழித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது ஈரான் மீது அமெரிக்காவும் நேரடியாக தாக்குதல் நடத்துகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதலை தொடங்கிவிட்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“ஈரானின் Fordow, Natanz, Esfahan அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின; அனைத்து போர் விமானங்களும் ஈரான் வான்பரப்பை விட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்டன; முதல்நிலை அணுசக்தி மையமான Fordow மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின; உலகின் வேறு எந்த ஒரு ராணுவமும் செய்யாத ஒன்றை அமெரிக்கா செய்துள்ளது; தற்போது அமைதிதான் தேவை” என சசமூக வலைதளங்களில் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சமூக வலைதளங்களில் டொனால் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்து வந்தார். ஈரானுக்கு அணு ஆயுதம் வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை; ஈரான் உடனே சரணடைய வேண்டும்; ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இடைவிடாமல் டிரம்ப், சமூக வலைதளங்களில் பதிவிட்டு எச்சரித்திருந்தார். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதலை நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.