ஈரான் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூன் 22-ந் தேதி ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு பேசினார். Iran PM Modi
ஈரானுடனான அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இடைவிடாமல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான், அணு ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பேரழிவுதான் ஏற்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஓமன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனை தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தற்போதைய சூழ்நிலை குறித்து இருவரும் விரிவாக விவாதித்தோம். அண்மைகாலமாக அதிகரித்துள்ள பதற்றம் குறித்த ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த பதற்றத்தைத் தணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் அர்சியல் நிலைத்தன்மயை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது என தெரிவித்துளார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் தொலைபேசியில் பேசியிருந்தார். இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தில் இஸ்ரேலை இந்தியா ஆதரிக்கவே கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.