இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதை சுட்டிக்காட்டி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது முதலில் 25 சதவீத வரியையும், பின்னர் கூடுதலாக 25 சதவீத அபராத வரியையும் விதித்தார். இது இந்திய ஏற்றுமதியாளர்களிடையே கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஒப்புக்கொண்டதால், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். இதனால், இந்தியா மீதான அபராத வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% அபராத வரியை ரத்து செய்யும் நிர்வாக உத்தரவில் இன்று (பிப்ரவரி 7) கையெழுத்திட்டுள்ளார்.இது இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான மொத்த வரி விகிதம் 50% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.இது ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்புக்கு உடனடியாக நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,“இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிறப்பான செய்தி! நமது இரு நாடுகளுக்கு இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் ஒப்பந்தம் செய்துள்ளோம். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவிற்காக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் உழைப்பாளி விவசாயிகள், தொழிலதிபர்கள், MSMEs, ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
