“இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட்” என தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலையை இன்று (ஆகஸ்ட் 4) திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடி செலவில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

முதல் கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடிக்கு இன்று சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை இன்று தொடங்கி வைத்தார்.

வாகன உற்பத்தியின் தலைநகரம்!
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், “தெற்காசியாவில் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட். நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் நிறுவனத்தைத் தொடங்கி பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தியாகிறது. வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர்.
வின்ஃபாஸ்ட் ஆலையால் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும். இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.