தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 19) அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் கடந்த ஆண்டைப் போலவே பள்ளி கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக பள்ளி கல்வித் துறைக்கு ரூ. 40,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டுக்கு ரூ. 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3,743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வித்துறையில் ஒதுக்கப்பட்ட முழுமையான நிதி விவரங்களை விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, 2497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திதியாண்டிலும் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட உண்டு, உறைவிட மாதிரிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் 352 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வசதியாக அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 கோடி ரூபாய் செலவில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22, 931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இடைநின்ற சூழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட 10௦ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2022-23 ஆம் ஆண்டு முதல் 13 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 37 மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளின் வாயிலாக, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
TN Budget : கீழடிக்கு ரூ. 17 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு பட்ஜெட் 2024: சென்னை… டிராபிக் ஜாம்- அகலப்படுத்தப்படும் சாலைகள்!