ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. வரும் ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. the three directors joined in paranthu po
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், மிஷ்கின், விஜய், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இயக்குநர் பாலா பேசும்போது, “ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பார்த்தவுடன், இந்தப் படத்தை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டும் என மாரி செல்வராஜிடம் கூறினேன்.

அதன்படி இந்த நேரத்தில் திரைப்பட விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து எப்படியாவது இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். உங்கள் பாதம் தொட்டு வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். ராம் மாதிரியான ஓர் இயக்குநர் நமக்கும், தமிழ்நாட்டுக்கும் தேவை. இதை தவிர வேற என்ன சொல்வது என தெரியவில்லை” என்றார் பாலா.
அப்போது மேடையேறிய மாரி செல்வராஜ், ”மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் சீடர்களான பாலா, ராம், வெற்றி மாறன் ஆகியோர் ஒரே மேடையில் இருப்பது எப்போதுமே நடக்காத ஒன்று… அதனால் பாலா நிற்கும் இந்த இடத்தில் வெற்றிமாறன் மற்றும் ராம் இருவரையும் மேடைக்கு அழைக்கிறேன்” என்றார்.

அதன்படி இருவரும் வந்த நிலையில், ராம் பேசும்போது, “பாலா அண்ணா எனக்கு காலேஜ்லயும் சீனியர். திரைத்துறையிலயும் சீனியர். நாங்கள் மூவரும் 20 வருடத்திற்கு பிறகு இப்போது தான் ஒரே மேடையில் நிற்கிறோம். நாங்கள் மூவருமே அவர் போட்ட ரூட்டில் நடந்து கொண்டிருக்கிறோம். பாலு மகேந்திரா சார் இதை பார்த்தார் என்றால் ரொம்ப சந்தோசப்படுவார் என நம்புகிறேன்.” என பேசினார்.
வெற்றிமாறன் பேசும்போது, “பாலு மகேந்திரா சார் இல்லாத நேரத்தில் நாங்கள் மூவரும் ஒரே இடத்தில் இருப்பது என்பது ரொம்ப அரிதாகவிட்டது. பாலாவை அடிக்கடி பட விழாக்களில் பார்க்க முடியாது. அந்த வகையில் இந்த மொமண்ட் எங்களுக்கு ரொம்ப முக்கியமானது” எனத் தெரிவித்தார்.