பிரதமராக அமித்ஷா செய்யும் பூஜை… வரவேற்கும் பிடிஆரின் அம்மா… 25 நிமிட மீனாட்சி மர்மம்!

Published On:

| By Minnambalam Desk

the reason behind amit shah madurai visit

அதிகாரத்தின் உச்சத்தை அடைவதற்காக வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக நாளை (ஜூன் 7) தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. the reason behind amit shah madurai visit

அதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5.55 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மதுரை விமானநிலையத்தில் வந்திறங்குகிறார் அமித்ஷா. அங்கிருந்து நேரடியாக மதுரை GRT ஹோட்டலில் அன்றிரவு தங்குகிறார். அங்கு யாரையும் சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை.

அதன் பிறகு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 11.25 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அமித்ஷா வருகையோட முக்கியமான காரணமே இந்த வழிபாட்டிற்காகத் தான். ஏனென்றால் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவிலின் புகழ்மிக்க சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலில்தான் எல்லாம் வல்லப்பா சித்தர் மறைந்த இடம் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த கோவில் புதன் அதிபதி பெற்ற இடம் என்பதால் இங்கு அர்ச்சனை செய்து வணங்கினால் கல்வியில் உயர்வு, அரசியலில் செல்வாக்கு, உயர்பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் இங்கே வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்கின்றனர்.

அதன்படி இப்போது உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித்ஷா அடுத்தது பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கோவில் வழிபாட்டிற்கு வருகை தர இருக்கின்றார் என்கிறது டெல்லி வட்டாரம்.

மொத்தம் 25 நிமிடம் மட்டுமே அமித்ஷா வழிபடப்போகும் இந்த கோவிலில் மத்திய உளவு பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றே பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

அமித்ஷாவுக்கு கோவிலில் வரவேற்பளிப்பதற்காக இந்த கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பில் இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணியும் அறங்காவலர் குழு இணை ஆணையர் உறுப்பினர்கள் 4 பேர் உட்பட தலைமை சிவாச்சாரியார்கள் சி காலசாய நாதன் செந்தில்பத்தர் கார்த்தி ஆகிய சிவாச்சாரியார்கள் சிராசுதாரர்கள் காளிமுத்து இவர்கள் அனைவரும் அமித்ஷா வை வரவேற்கின்றனர்.

அப்போது சிவாச்சாரியார்கள் தாம்பூலத்தில் திருநீறு குங்குமம் கொடுக்க, அதனை அமித்ஷா பெற்றுக்கொண்டவுடன் ’கட்டளை மாலை’ அறங்காவலர் குழு தலைவரால் அனுவிக்கப்படும். அறங்காவலர் குழுத்தலைவராக இருக்கும் ருக்மணி பெண்மணி என்பதால் அறங்காவலர் குழு இணை ஆணையர் மூலமாக அணிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சித்திவிநாயகர், சுப்ரமணி வள்ளி தெய்வானை முன்பு அமித்ஷா பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பிறகு மூலஸ்தானத்திற்கு அழைத்து வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்பு அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்படும்.

இந்த அர்ச்சனையில்தான் அரசியலில் செழிக்க நாட்டு சேமம் உள்ளிட்ட சிறப்பு அர்ச்சனை நடைபெறும். அதன்பிறகு பஞ்சமுகம் ஆரத்தி காட்டி பிறகு ஒத்தமுகம் ஆரத்திக்காட்டி சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் செய்யப்படும். அதன்பிறகு முக்கத்தி பிள்ளையார் இருக்கும் இடத்தில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்வாராம் அமித்ஷா.

வழிபாட்டை முடித்துவிட்டு 11.45 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 12.05க்குள் மீண்டும் GRT ஹோட்டல் வருகிறார். அங்கு 12.10 முதல் 1.30 மணி வரை முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனது அறையிலேயே சந்திக்கின்றார்.

பிறகு 1.30 லிருந்து 4 மணிவரை மதிய உணவு மற்றும் சிறிய ஓய்விற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாலை 4 .05 மணிக்குள் ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் குளோபல் மருத்துவமனை திடலுக்கு செல்லும் அவர் 4.10 லிருந்து 5.30 வரை பாஜக நிர்வாகிகள் உடன் சந்திப்பை நடத்துகிறார்,

இந்த சந்திப்பில் சமீபத்தில் அண்ணாமலை பற்றிய பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்றுள்ளதாகவும் தனிப்பட்ட முறையில் செயல்படும் அண்ணாமலை பற்றி புகார்களை தெரிவித்த மற்ற பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கிளம்பி மதுரை விமான நிலையம் சென்று மீண்டும் டெல்லிக்கு கிளம்புகிறார் அமித்ஷா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share