டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் டிசம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 13.91 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ரூ. 10,657 கோடியாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q3 FY25) பதிவான ரூ. 12,380 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீத வீழ்ச்சியாகும். இருப்பினும், இந்த காலாண்டில் TCS நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ. 67,087 கோடியாக அதிகரித்துள்ளது. TCS பங்குகள் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து ரூ. 3,243 ஆக வர்த்தகமானது.
TCS நிறுவனத்தின் வருவாய் மூன்றாம் காலாண்டில் ரூ. 67,087 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் (Q-o-Q) ஒப்பிடும்போது 2.0% அதிகமாகும். நிலையான நாணய மதிப்பில் (constant currency terms) வருவாய் Q-o-Q 0.8% உயர்ந்துள்ளது. டாலரில் வருவாய் USD 7,509 மில்லியனாக உள்ளது, இது Q-o-Q 0.6% அதிகமாகும். செயல்பாட்டு வருமானம் ரூ. 16,889 கோடியாக பதிவாகியுள்ளது. இது வருவாயில் 25.2% ஆகும்.
TCS நிறுவனம் ஒரு இடைக்கால ஈவுத்தொகை (interim dividend) மற்றும் ஒரு சிறப்பு ஈவுத்தொகை (special dividend) அறிவித்துள்ளது. இடைக்கால ஈவுத்தொகை ரூ. 11 ஆகவும், சிறப்பு ஈவுத்தொகை ரூ. 46 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈவுத்தொகையைப் பெறுவதற்கான தகுதி தேதி ஜனவரி 17 ஆகும். பணம் செலுத்தும் தேதி பிப்ரவரி 3 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான TCS, டிசம்பர் 31, 2025 அன்றுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை 11,151 குறைந்து 5,82,163 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய TCS அறிவித்திருந்தது.
செப்டம்பர் காலாண்டில் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 19,755 பேர் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இதில், மறுசீரமைப்பு காரணமாக கட்டாயமில்லாத பணிநீக்கங்கள் சுமார் 6,000 மட்டுமே என்றும் நிறுவனம் கூறியிருந்தது.
