சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இது தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து அமலாக்கத் துறை பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் தடை விதித்தது.
நீதிமன்றம் தடை விதித்துள்ள சூழலில் தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்க துறையின் மேல்முறையீட்டு ஆணைய அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எம் எஸ் ரமேஷ் அமர்வு விசாரித்தது. அப்போது, தான் அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் உயர் நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி அக்டோபர் 8ம் தேதி இறுதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
