அலெப்போவில் மீண்டும் வெடித்த மோதல்… வீடுகளை விட்டு வெளியேறும் 45,000 மக்கள்! சிரியாவில் தொடரும் சோகம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

syria aleppo clashes thousands flee sdf army conflict humanitarian crisis

14 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து போயிருக்கும் சிரியாவில், மீண்டும் ஒரு மனிதாபிமானப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அலெப்போ (Aleppo) நகரில் சிரிய அரசுப் படைக்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைக்கும் (SDF) இடையே வெடித்த கடும் மோதலால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி… வெடித்தது போர்: குர்திஷ் தலைமையிலான SDF படைகளை, சிரியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளுடன் இணைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியே தற்போதைய மோதலுக்குக் காரணம். பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் மோதல் தீவிரமடைந்துள்ளது. அலெப்போவில் உள்ள குர்திஷ் மக்கள் அதிகம் வசிக்கும் இரண்டு பகுதிகளை “மூடப்பட்ட ராணுவ மண்டலங்களாக” (Closed Military Zones) சிரிய ராணுவம் அறிவித்ததே பதற்றம் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

ADVERTISEMENT

45,000 பேர் அகதிகளாக வெளியேற்றம்: இந்தத் திடீர் தாக்குதலால் பொதுமக்கள் உயிருக்குப் பயந்து வீதிக்கு வந்துள்ளனர். புதன்கிழமை இரவு நிலவரப்படி, சுமார் 45,000-க்கும் மேற்பட்டோர் அலெப்போவை விட்டு வெளியேறியுள்ளதாகச் சமூக விவகாரங்களுக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

  • பெரும்பாலான மக்கள் வடமேற்கில் உள்ள அஃப்ரின் (Afrin) பகுதியை நோக்கிச் செல்கின்றனர்.
  • சிரிய ராணுவம் அமைத்துக் கொடுத்துள்ள மனிதாபிமானப் பாதைகள் (Humanitarian Corridors) வழியாக, கையில் கிடைத்த உடைமைகளை எடுத்துக்கொண்டு மக்கள் நடந்தே செல்லும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கின்றன.
  • சில குடும்பங்கள் அரசுப் பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

மக்களின் கண்ணீர்: குழந்தையைத் முதுகில் சுமந்தபடி வெளியேறிய அஹ்மத் (38) என்பவர் கூறும்போது, “சண்டை பயங்கரமாக இருக்கிறது. எங்கே போவது என்றே தெரியவில்லை. 14 வருடங்களாகப் போர் நடக்கிறது, இது போதாதா? எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தார். மற்றொரு குடியிருப்பாளரான அம்மார் ராஜி (41), “என் ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற வேறு வழியில்லாமல் வெளியேறுகிறோம். மீண்டும் எங்கள் வீட்டுக்குத் திரும்புவோமா என்பதே சந்தேகம்தான்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

ADVERTISEMENT

உயிரிழப்புகள்: கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த மோதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது சமீபத்திய காலங்களில் ராணுவத்திற்கும் SDF படைக்கும் இடையே நடந்த மிகக் கடுமையான மோதலாகப் பார்க்கப்படுகிறது.

அதிகாரப் போட்டியில் நடக்கும் இந்த மோதல்களால், அப்பாவிப் பொதுமக்கள் மீண்டும் நடுத்தெருவில் நிற்கின்றனர். சிரியாவில் அமைதி திரும்புமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share