கல்வி நிதியை வழங்க மறுத்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. Supreme Court Declines Urgent Hearing on Tamil Nadu’s Case Against Centre Over Education Fund Row
இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் தமிழக எம்பிக்களும் பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு, கல்வி நிதியை விடுவிக்கவில்லை.
இதனையடுத்து கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2151.59 கோடியை 6% வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 2,291 கோடியை மத்திய அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் வழக்கு.
உச்சநீதிமன்றத்தில் இன்று, புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில் தமிழக அரசின் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கோரிக்கை வைத்தார். இதனை நீதிபதிகள் பிகே மிஸ்ரா, மன்மோகன் அமர்வு நிராகரித்தது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க எந்த அவசரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.