பாரசீக வளைகுடா பகுதியில் மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இப்பகுதியில் இயங்கும் இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பாரசீக வளைகுடாவில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் இந்தியக் கடல்சார் சொத்துக்கள் மீதான அதன் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் , “மாலுமிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். தேசிய மற்றும் சர்வதேச முகமைகளுடன் நாங்கள் தொடர் தொடர்பில் இருக்கிறோம்,” என்றார்.
பாரசீக வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நிலவுவதால், இந்தியக் கப்பல்களை உடனுக்குடன் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேகக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்க விரைவுப்படை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படை, வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் இணைந்து அமைச்சகம் பணியாற்றி வருகிறது. மேலும், மாலுமிகளின் குடும்பத்தினருக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா எப்போதும் தனது மாலுமிகளின் பாதுகாப்பில் உறுதியாக இருக்கும் என்று அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
