தமிழக மீனவர்கள் மேலும் 7 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் 15 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். Tamil Nadu Fishermen
மீன்பிடி தடை காலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 ராமேஸ்வரம் மீனவர்கள் ஜூன் 29-ந் தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஜூலை 1-ந் தேதி அதிகாலை மேலும் 7 ராமேஸ்வரம் மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.