புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
நாளை மறுநாள் வியாழக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. அடுத்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
இவர்களின் வசதிக்காக இன்று (டிசம்பர் 30) முதலே தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
“சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பேருந்துகளும்,நாளை, 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும் நாளையும் மொத்தம் 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் மாதாவரத்திலிருந்துமொத்தம் 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வாரத்தில் 30/12/2025 செவ்வாய்கிழமை 11,502 பயணிகளும், 31/12/2025 புதன்கிழமை 8,380 பயணிகளும், 01/01/2026 வியாழக்கிழமை 11,135 பயணிகளும் 02/01/2026 வெள்ளிக்கிழமை 7,501 பயணிகளும் 03/01/2026 சனிக்கிழமை 10,794 பயணிகளும் மற்றும் 04/01/2026 ஞாயிறு 19,216 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
