கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தத் திட்டம், ‘பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா’ என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் தகுதியான கலைஞர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை கடன் மற்றும் ரூ. 15,000 உபகரணங்கள் வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதாகும். இதன் கீழ், முதல் கட்டமாக ரூ. 1 லட்சம் வரை 5% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
அடுத்ததாக, இரண்டாம் கட்டத்தில் ரூ. 2 லட்சம் வரை 5% வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இதுமட்டுமின்றி, கலைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சிகளின் போது தினமும் ரூ. 500 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், நவீன கருவிகள் வாங்குவதற்காக ரூ. 15,000 வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயனடையும் கலைஞர்களுக்கு ‘பிரதம மந்திரி விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டையும் வழங்கப்படும். முதல் கட்ட கடனை 18 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இரண்டாம் கட்ட கடனை 30 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கடனைத் திரும்பச் செலுத்தும் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பலதரப்பட்ட கலைஞர்கள் பயனடைவார்கள். மீன் வலை செய்பவர்கள், தையல்காரர்கள், சலவை செய்பவர்கள், மாலை கட்டுபவர்கள், முடி திருத்துபவர்கள், பாரம்பரிய பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் செய்பவர்கள், கூடை மற்றும் பாய் செய்பவர்கள், கொத்தனார்கள், காலணி செய்பவர்கள் (தோல் வேலை செய்பவர்கள்), சிற்பிகள் (கல் சிற்பிகள்), செம்பு வேலை செய்பவர்கள், தங்க நகை செய்பவர்கள், சுத்தியல் மற்றும் கருவிப் பெட்டி செய்பவர்கள், கொல்லர்கள், படகு கட்டுபவர்கள் மற்றும் தச்சர்கள் போன்றோர் இத்திட்டத்தின் கீழ் வருவார்கள்.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 13,000 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் சுய அறிவிப்புப் படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் திட்டம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பாரம்பரியத் தொழில்களை நவீனமயமாக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
