ரயிலில் எதிர் இருக்கையில் கால் வைக்கக்கூடாது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு சுமார் 8.6 லட்சம் பேர் புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்துகின்றனர் என்று தெற்கு ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ரயிலில் பயணிகள் படிகட்டுகளில் அமர்வது, எதிர் இருக்கைகள் காலியாக இருந்தால் அதில் காலை நீட்டி அமர்வது என சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது மின்சார ரயில்களில் தொடர்ந்து நடக்கிறது.
இந்தசூழலில் பயணிகளுக்கு முக்கிய அறிவுரையை தெற்கு ரயில்வே வழங்கியிருக்கிறது.
இன்று (செப்டம்பர் 12) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “பயணிகள் எதிர் இருக்கையில் கால்களை வைப்பதால் அந்த இருக்கை அசுத்தமாவதுடன், மற்ற பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
ரயில் பயணிகள் தங்களது உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் இருக்கை பிடித்து வைக்கும் சம்பவங்களும் அதிகளவு நடக்கின்றன. அதனால் முதலில் வரும் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.
அதேபோன்று இருக்கைகள் காலியாக இருந்தாலும் அவற்றில் அமராமல் பெட்டிகளின் நுழைவாயிலில் அமரும் போது, மற்ற பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் இடையூறு ஏற்படுகிறது.
ரயில் நிற்பதற்கு முன்பாகவே இருக்கைகளை பிடிப்பதற்காக ஓடோடி ஏறும் போது, அது பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
எனவே இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இந்த எச்சரிக்கையையும் மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.