‘மருதமலை மாமணியே முருகையா’ பாடலின் மெட்டை பயன்படுத்தி, தவெக நிகழ்ச்சியில் பாடியதற்கு பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நேற்று (பிப்ரவரி 2) பனையூரில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பாடகர் வேல்முருகன், விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் வாழ்த்தி பாடினார்.
அவரது பாட்டை கேட்டு உற்சாகமான விஜய், மேடை ஏறி நடனமாடிய வீடியோவும் வைரலானது.
ஆனால் ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற புகழ்பெற்ற பக்திப் பாடலின் மெட்டைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையானது. இது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், “இந்த பாட்டுக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உற்சாகப்படுத்துவதற்காக அப்படி பாடினேன். முருகரை தவறாக பாடுவது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்.
இதற்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் தவறாக பாடவேண்டும் என்று பாடவில்லை. ஒருவேளை தவறாக தெரிந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
