”75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. Should retire at the age of 75
ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மறைந்த மோரோபந்த் பிங்களே குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மோகன் பகவத் கூறுகையில், “75 வயதில் உங்களுக்கு சால்வை அணிவிக்கப்படுகிறது என்றால், நீங்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று மோரோபந்த் பிங்களே ஒருமுறை கூறியிருக்கிறார். அதாவது உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டால் நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று கூறினார்.
இந்த கருத்தை வைத்து பாஜகவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
சிவசேனாவைச் சேர்ந்த பிரயங்கா சதூர்வேதி கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இடையே என்ன நடக்கிறது என்று அவர்களது கருத்துகளில் இருந்தே தெளிவாகிறது.
2014ல் பாஜக ஆட்சி அமைத்த போது 75 வயதான கட்சியின் மூத்த தலைவர்களை, `மார்க் தர்ஷக் மண்டல்` (வழிகாட்டி குழு)-க்கு அனுப்ப முன்பு முடிவு செய்து இருந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஆர்.எஸ்.எஸ். அதை பாஜகவுக்கு நினைவூட்டியுள்ளது.உள் மோதல்கள் இப்போது பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் விளைவு யாருக்கும் தெரியாது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “விருதுகளைத் தேடும் ஏழை பிரதமருக்கு இது எப்படிப்பட்ட ஒரு செய்தி. வரும் செப்டம்பர் 17, 2025 அன்று அவருக்கு 75 வயதாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவூட்டியுள்ளார். ஆனால், பிரதமர் பதிலுக்கு அவரிடம், அவருக்கும் (மோகன் பகவத்துக்கும்) செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது என்று சொல்லலாம். ஒரே அம்பில் இரண்டு இலக்குகள்” என்று விமர்சித்துள்ளார்.
ஆனால் முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவில் 75 என்கிற வயது வரம்பு எதுவும் இல்லை. பிரதமர் மோடி இந்த ஆட்சி காலத்தை நிறைவு செய்வார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Should retire at the age of 75