’பீஸ்ட்’ படம் வழியே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஷைன் டாம் சாக்கோ. பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘குட் பேட் அக்லி’யில் தலைகாட்டினார். shine tom chacko take uturn his life from drugs
இவர் கடந்த மாதம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக போலீசாரால் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனையடுத்து நடந்த எதிர்பாரா சாலை விபத்தில் இவரது தந்தை சி.பி.சாக்கோ மரணமடைந்தார். ஷைன் டாம் சாக்கோவும் அவரது தாயும் காயமடைந்தனர்.
இந்த விபத்து நிகழ்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக, கார்த்திக் சூர்யா எனும் சமூகவலைதள பிரபலத்தின் பாட்காஸ்ட்டில் இயக்குனர் ஏ.ஜெ.வர்கீஸ் உடன் இணைந்து பேசியிருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ.

கடந்த வாரம் இது கார்த்திக் சூர்யாவின் யூடியூப் பக்கத்தில் வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் ‘எப்போது போதையில் இருந்து மீள முடிவெடுத்தீர்கள்’ என்ற கேள்விக்கு, ’அது என்னை மட்டும் பாதிக்காமல் சுற்றியிருந்தவர்களையும் பாதித்த போதுதான்’ என்று பதிலளித்திருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ.
போதைப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமென்று முடிவெடுத்து மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார். படப்பிடிப்புகளில் ஒவ்வொரு டேக்குக்கும் இடையே சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவர், தற்போது அப்பழக்கத்தை அறவே விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
“டென்னிஸ் அரை மணி நேரம் விளையாடிவிட்டு டப்பிங் செல்கிறேன். அதனை முடித்த பிறகு அரை மணி நேரம் கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்படிச் செய்யாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். பழைய பழக்கங்களுக்குத் திரும்ப வேண்டுமென்கிற உந்துதல் வலுப்பெற்றுவிடும்.
போதையில் இருந்து விடுபடுவதென்பது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், நமது கவனத்தை வேறொன்றின் மீது திருப்பும்போது அந்த எண்ணம் மாறும். மிக மெதுவாக அது நிகழும்” என்றிருக்கிறார்.
கூடவே, தொலைக்காட்சிகளில் பார்ப்பது போல டென்னிஸ் விளையாடுவதெல்லாம் அத்தனை எளிதல்ல என்று கூறியிருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ. தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்காக, நீச்சலும் கற்று வருவதாக இந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது சினிமாவை தாண்டி, கார் பந்தயத்திலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவருடைய தாக்கம், தற்போது பல்வேறு நடிகர் நடிகைகள் மத்தியிலும் எதிரொலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.