தமிழ்நாடு மின்சார வாரியம் – அதானி நிறுவனம் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை: செந்தில் பாலாஜி

Published On:

| By Minnambalam Login1

senthil balaji on adani

சூரிய மின்சக்தி ஓப்பந்தம் பெறுவது சம்பந்தமான வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சாரத்துறை எந்த வித ஒப்பந்தமும் செய்யவில்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ்(Ministry of New and Reneweable Energy) இயங்கும் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு 12 ஜிகா வாட் சூரிய மின்சக்தியை விற்பதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அசூர் குளோபல் பவர் லிமிடெட் நிறுவனங்கள் ரூ.2100 கோடி அளவில் லஞ்சம் கொடுப்பதற்குத் திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த குற்றப்பத்திரிக்கையில், அதானி நிறுவனம் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் ஜம்மு காஷ்மீர், தமிழ் நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் மின்சாரத் துறை வாரியங்கள் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் சூரிய மின்சார சக்தி வாங்குவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருக்கும் நிலையில்,  அதானி விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கரூர் காமராஜ் மார்க்கெட் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இன்று (நவம்பர் 21) சென்றிருந்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு “அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் கடந்த மூன்றாண்டுகளில் வணிக ரீதியான எந்த தொடர்பும் இல்லை.

தற்போதைய ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவைக்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய மின்சாரத் துறையின் கீழ் செயல்படும் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன், 25 வருடத்திற்கு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அந்த நிறுவனத்திற்கு மின்சாரத்தை விநியோகிக்கிறது.

இந்த நிறுவனம் மாநிலங்களின் தேவைக்கேற்ப, விலையை உறுதி செய்து மின்சாரத்தை விநியோகிக்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசு சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.2.61க்கு கொள்முதல் செய்துள்ளது.” என்று செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பழனி முருகன் கோவிலில் திருமா தரிசனம்… ஸ்படிக மாலை அணிவித்த போகர் ஆதீனம்

மீண்டும் ஒரு சூப் சாங்! : தனுஷ் கொடுத்த அப்டேட்

2,100 கோடி ஊழல்… அதானி எப்போது கைது? – மோடியை விளாசிய ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share