வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிபிஐ முதுபெரும் தலைவர் நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) காலமானார்.
இதற்கிடையே நல்லகண்ணுவை பார்ப்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் நல்லகண்ணு மறைவெய்திவிட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் நல்லகண்ணுக்கு அஞ்சலி செலுத்திய சீமான் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “தனது உடலை கூட கொடையாக கொடுத்திருக்கிறார் அய்யா நல்லகண்ணு. ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சான்று. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர். எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் தன்னலம் இல்லாமல் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் அரும்பாடுபட்டவர்.
எவராலும் குறை சொல்ல முடியாத ஒரு புனிதர். நம்மோடு அவர் இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த மன வலியாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய பல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன..
மகத்தான தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என்று உருக்கமாக பேசினார்.
