சேலத்தில் தவெக தலைவர் விஜய் நடத்தும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்த 850 தவெக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெகவினர் போலீசில் மனு கொடுத்தனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கொடுக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் சேலத்தில் வரும் 13-ந் தேதி விஜய், பொதுமக்கள் சந்திப்பாக இல்லாமல் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். இந்த சந்திப்பு கூட்டத்தை நடத்த 51 நிபந்தனைகளையும் போலீசார் விதித்துள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதிலும் விஜய் பிரசார வேனில் நின்றபடிதான் பேச இருக்கிறார். இந்தக் கூட்டத்திலும் தவெக நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடப்படாது.
இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி சீட்டும் வழங்கப்படுகிறது.
இதனிடையே சேலம் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை ஒழுங்குபடுத்த தவெகவினர் 850 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 100 பெண்களும் பங்கேற்றுள்ளனர்.
