அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம் : ஓம்.பிர்லாவுக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம்!

Published On:

| By Kavi

சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். 

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

ADVERTISEMENT

பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளிக்க இருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்றுநேரடித் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தமக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்திருந்தார். 

அன்றைய தினம் தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் இவர்களைத் தான் சொல்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு இன்று (பிப்ரவரி 9) கடிதம் எழுதியுள்ளனர். 

அதில்,  

ADVERTISEMENT

மிகுந்த மனவேதனையுடனும், அரசியலமைப்புச் சாசனத்தின் மீதான ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

மக்களவையின் தலைவர் மற்றும் இந்த உயரிய அவையின் அரசியலமைப்பு காவலராகிய நீங்கள், ஆளுங்கட்சியின் அழுத்தத்தினால், குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சிப் பெண் மக்களவை உறுப்பினர்களுக்கு எதிராக பொய்யான, ஆதாரமற்ற மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தலைவர் இருக்கை என்பது நாடாளுமன்றத்தின் மரியாதையைப் பாதுகாக்கவும், நியாயத்தை உறுதி செய்யவும், கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளைக் காக்கவும் அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சாசனப்பதவி ஆகும்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பேச அனுமதி அளிக்கப்பட்ட பின், பிரதமர் பதிலளிப்பது என்பது நிலைபெற்ற நாடாளுமன்ற மரபாகும்.

ஆனால், கடந்த நான்கு தொடர்ச்சியான நாட்களாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படாமல் திட்டமிட்ட வகையில் மறுக்கப்பட்டுள்ளார்.

இது முன்னெப்போதும் இல்லாததும், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததுமாகும்.

மற்றொரு புறம், ஆளுங்கட்சியின் உத்தரவின் பேரில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எட்டு மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்;

அதே சமயம், பாஜகவைச் சேர்ந்த ஒரு மக்களவை உறுப்பினர் முன்னாள் பிரதமர்களை குறித்து அநாகரிகமான மற்றும் அசிங்கமான முறையில் பேச அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதி கோரி, மேற்கண்ட பாஜக மக்களவை உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் உங்களை சந்தித்தபோது, ஒரு பெரும் தவறு நடந்துள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் வருமாறு கேட்டீர்கள்.

மீண்டும் உங்களை சந்தித்தபோது, அரசின் பதிலை எதிர்பார்த்து இருப்பதாகக் கூறி, இந்த விஷயத்தில் நீங்கள் இனி முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டவரல்ல என்பதைக் காட்டும் வகையில் பேசினீர்கள். இது, அவையின் தலைவராக உங்கள் அதிகாரம் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இதனைத் தொடர்ந்து, வழக்கமான நடைமுறைகளை மீறி, மாலை 5 மணிக்கு பிரதமர் மக்களவையில் பேசுவார் என நிர்ணயிக்கப்பட்டது. INDIA கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு எதிராக எழுந்து போராட்டம் நடத்தினர்; இறுதியில் பிரதமர் அவைக்கு வரவில்லை.

அடுத்த நாள், பிரதமர் அவைக்கு வராததை நியாயப்படுத்த ஆளுங்கட்சியின் கடும் அழுத்தத்தின்கீழ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையை நீங்கள் வெளியிட்டீர்கள்.

எங்களது போராட்டங்கள் தொடர்ந்து அமைதியானவையாகவும், உறுதியானவையாகவும், முழுமையாக ஜனநாயக நெறிமுறைகளுக்குள் அமைந்தவையாகவும் இருந்தன.

எங்களில் பெரும்பாலோர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள்; பலர் முதல் தலைமுறை அரசியல்வாதிகள். மக்கள் மத்தியில் பல தசாப்தங்களாக உழைத்து, எதிர்ப்புகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டு எங்கள் அரசியல் பயணத்தை உருவாக்கியவர்கள் நாங்கள்.

எங்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குவது, பொதுவாழ்க்கையில் மரியாதையுடனும் தைரியத்துடனும் தங்கள் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் மீதும் நடத்தப்படும் கடுமையான தாக்குதலாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி, அவரிடமிருந்து பொறுப்பேற்பை வலியுறுத்தி வந்ததற்காக மட்டுமே நாங்கள் குறிவைக்கப்படுகிறோம்.

அவர் அவைக்கு வராததற்குக் காரணம் எங்களால் ஏற்பட்ட எந்த அச்சுறுத்தலும் அல்ல; அது அவரது பயத்தின் வெளிப்பாடு. எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை.

நாங்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள். எங்கள் கட்சி அன்பு, அமைதி, அரசியலமைப்புச் சாசன மதிப்புகள் மற்றும் மனித மரியாதைக்காக நிற்கிறது. வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் நாங்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

மிரட்டல்களால் மௌனம் கொள்ளச் செய்ய முடியாத, தைரியமான, மக்கள் தேர்ந்தெடுத்த பெண் பிரதிநிதிகள் நாங்கள்.

தலைவர் பதவியின் மரியாதையும், இந்த அவையின் நம்பகத்தன்மையும் மீட்கப்பட வேண்டுமெனில், வெளிப்படைத்தன்மையே ஒரே வழி என நாங்கள் நம்புகிறோம்.

மக்களவையின் நியாயமான, பாரபட்சமற்ற காவலராக நீங்கள் செயல்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த முயற்சியில் நாங்கள் உங்களுடன் உறுதியாக நின்று, முழுமையான ஆதரவை வழங்குவோம்.

கடினமான சூழ்நிலைகளிலும் சரியானதைச் செய்து, நாட்டின் நலனுக்காக அரசியலமைப்புச் சாசன மரபுகளைப் பாதுகாத்தவராக வரலாறு உங்களை நினைவுகூரட்டும். அரசியலமைப்புச் சாசன மதிப்புகளை சிதைத்து, நாட்டின் ஜனநாயகத் தளத்தை சேதப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்களின் அழுத்தத்திற்கு தலைவணங்கியவராக வரலாறு உங்களை நினைவுகூர வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share